- வீடு›
- விளையாட்டு›
- ஊரடங்குக்கு மத்தியில் ராஞ்சியில் தீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம்
ஊரடங்குக்கு மத்தியில் ராஞ்சியில் தீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம்
By: Karunakaran Sun, 28 June 2020 11:45:45 AM
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 26 வயதான தீபிகா இந்திய நட்சத்திர வில்வித்தை வீராங்கனை ஆவார். இவர் உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். மேலும் இவர், இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் அவர், சகநாட்டு வில்வித்தை வீரரான 28 வயதான அதானு தாசை காதலித்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோய் விட்டதால், தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
ஊரடங்குக்கு மத்தியில் இவர்களது திருமணம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மேலும், முக்கியமானவர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டுதலை பின்பற்றி திருமணத்திற்கு வரும்படி, திருமண அழைப்பிதழில் கேட்டு கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தீபிகா குமாரி கூறுகையில், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு முககவசம், சானிடைசர் வழங்கப்படும். திருமண நிகழ்ச்சி பெரிய ஹாலில் நடைபெறுகிறது. எனவே சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவோம். நாங்கள் யாரையும் தொடப்போவதில்லை. நாங்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.