- வீடு›
- விளையாட்டு›
- டெல்லி அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி
டெல்லி அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி
By: Karunakaran Wed, 28 Oct 2020 11:02:24 AM
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றபோது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் - விருத்திமான் சாஹா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 8.4 ஓவரில் ஐதராபாத் 100 ரன்னைத் தொட்டது. வார்னர் 34 பந்தில் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார். பின் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 27 பந்தில் அரைசதம் அடித்தார். சாஹா 45 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அதன்பின், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரகானேவும் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியை கட்டுப்படுத்தினர். தவான் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இறுதியில், டெல்லி அணி 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஐதராபாத் அணி சார்பில் ரஷீத் கான் சிறப்பாக பந்து வீசி 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.