- வீடு›
- விளையாட்டு›
- டென்னிசில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டேன் - பெடரர்
டென்னிசில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டேன் - பெடரர்
By: Karunakaran Thu, 30 July 2020 7:13:56 PM
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னில் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் ஆவார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இவற்றில் 8 விம்பிள்டன் மகுடமும் அடங்கும். தரவரிசையில் 310 வாரங்கள் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு வலது முழங்கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்துக்காக அவர் ஆபரேஷன் செய்து கொண்டார். அப்போது அவர், இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன். அடுத்த ஆண்டில் புத்துணர்ச்சியுடன் களம் திரும்புவேன் என கூறியிருந்தார். தற்போது, 38 வயதான பெடரர் ஓய்வு கட்டத்தை நெருங்கி விட்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பெடரர், எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் இறுதி கட்டத்தில் இருப்பதை அறிவேன். அடுத்த 2 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறேன். எப்போது தளர்வடைகிறேனோ அப்போது விளையாடுவதை நிறுத்தி விடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், டென்னிசை பொறுத்தவரை வயதானாலும் நிச்சயம் விளையாட முடியும். ஆனால் தொடர்ந்து கடின பயிற்சியில் ஈடுபட முடியாது. 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி டோக்கியோவில் நடக்கும் என்று நம்புகிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறினார்.