- வீடு›
- விளையாட்டு›
- இந்திய கிரிக்கெட் வாரியம் டெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு 4800 கோடி ரூபாய் வழங்க உத்தரவு
இந்திய கிரிக்கெட் வாரியம் டெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு 4800 கோடி ரூபாய் வழங்க உத்தரவு
By: Karunakaran Sat, 18 July 2020 12:54:04 PM
2008-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் என்ற அணியும் விளையாடியது. இது ஐதராபாத் நகரை மையமாக கொண்டு, 2008-ம் ஆண்டு முதல் 2012 வரை விளையாடியது. 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டியில், டெக்கான் சார்ஜஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
வங்கி உத்தரவாத தொகையான ரூ.100 கோடியை செலுத்த தவறியதால், 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி ஐ.பி.எல். போட்டியில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியை கிரிக்கெட் வாரியம் நீக்கியது. கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தை மீறியாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டி.சி.எச்.எல். நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மும்பை ஐகோர்ட்டின் உத்தரவுபடி இதற்கு நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சி.கே. தாக்கர், ஐ.பி.எல்.லில் இருந்து டெக்கான் சார்ஜஸ் அணி நீக்கப்பட்டது சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்தார்.
மேலும் அவர், டெக்கான் சார்ஜஸ் நிறுவனத்துக்கு ரூ.4,814.67 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்க வேண்டும் எனவும், 2012-ல் இருந்து 10 சதவீத வட்டியை கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவினால் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.