- வீடு›
- விளையாட்டு›
- ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிகள் பதக்கம் வெல்லும் - மன்பிரீத் சிங், ராணி ராம்பால் ஆகியோர் நம்பிக்கை
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிகள் பதக்கம் வெல்லும் - மன்பிரீத் சிங், ராணி ராம்பால் ஆகியோர் நம்பிக்கை
By: Karunakaran Fri, 24 July 2020 1:26:07 PM
டோக்கியோவில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான ஒரு வருட கவுண்டவுன் நேற்று தொடங்கியது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிகள் பதக்க மேடையை அலங்கரிக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மன்பீரித் சிங் கூறுகையில், கடந்த ஆண்டில் எங்கள் அணி செயல்பட்ட விதத்தை பார்க்கும் போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல நிச்சயமாக நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் நல்ல வளர்ச்சியை எட்ட போதிய காலஅவகாசம் இருப்பதாக கூறியுள்ளார்.
பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஒலிம்பிக் போட்டி குறித்து கூறுகையில், நம்முடைய அணி விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் ஏற்றம் கண்டு வருகிறது. அடுத்த ஒரு ஆண்டில் நமது ஆட்டத்தில் நிச்சயம் மேலும் மேம்பாடு அடைவோம். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் களத்தில் சாதுர்யமாக செயல்பட்டு அசத்துவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.