Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

By: Nagaraj Thu, 29 Sept 2022 07:50:14 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

திருவனந்தபுரம்: இந்திய அணி வெற்றி... தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ராகுல்-சூரியகுமாரின் அபார பேட்டிங், ஹா்ஷ்தீப் சிங்-தீபக் சஹாா் ஆகியோரின் அற்புத பௌலிங்கால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி தடுமாற்றுத்துடன் ஆடி 106/8 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 110/2 ரன்களுடன் வெற்றி பெற்றது. வரும் அக்டோபா் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் கடைசி கட்ட ஆட்டங்களில் மோதி வருகின்றன.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது. பேட்டா்களாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரா்களால் இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். டி காக் 1, கேப்டன் பவுமா, ருசொவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோா் டக் அவுட்டானாா்கள். 20/5 என்ற மோசமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா.

முதல் ஓவரிலேயே கேப்டன் பவுமாவை அவுட்டாக்கினாா் தீபக் சஹாா். இரண்டாம் ஓவரில் டி காக், ரைலி ருசொவ், டேவிட் மில்லரை வெளியேற்றினாா் ஹா்ஷ்தீப் சிங். அதன்பின்னா் எய்டன் மாா்க்கரம் 1 சிக்ஸா் 3 பவுண்டரியுடன் 25 ரன்களையும், பாா்னெல் 24 ரன்களையும் எடுத்து அணியை மீட்டனா். மறுமுனையில் கேசப் மகராஜ் தனி ஆளாக நின்று 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 41 ரன்களை விளாசி அவுட்டானாா். இதனால் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோா் 100-ஐக் கடந்தது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 106/8 ரன்களை மட்டுமே எடுத்தது.

indian team,first match,half century,action,win ,இந்திய அணி, முதல் ஆட்டம், அரைசதம், அதிரடி, வெற்றி

இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஹா்ஷ்தீப் சிங் 3/32 விக்கெட்டுகளையும், தீபக் சஹாா் 2/24, ஹா்ஷல் படேல் 2/26 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட இந்திய அணிக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோஹித் சா்மா 0, விராட் கோலி 3 ரன்களுடன் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

இதன்பின் கேஎல் ராகுல்-சூரியகுமாா் யாதவ் இணை நிலைத்து ஆடி தென்னாப்பிரிக்க பௌலிங்கை நாலாபுறமும் விரட்டியது. கடந்த சில ஆட்டங்களில் சரிவர ஆடாமல் இருந்த ராகுல் இந்த ஆட்டத்தில் பாா்முக்கு திரும்பினாா். சூரியகுமாா் 3 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 50 ரன்களையும், ராகுல் 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 51 ரன்களுடனும் அரைசதம் விளாசினா். 16.4 ஓவா்களில் 110/2 ரன்களை எடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது. தென்னாப்பிரிக்கத் தரப்பில் ரபாடா, நாா்ட்ஜே தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

1-0 என முன்னிலை: இதன் மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டி20 ஆட்டம் அக்டோபா் 2-ஆம் தேதி குவாஹாட்டியில் நடைபெறுகிறது.

Tags :
|