- வீடு›
- விளையாட்டு›
- ஆட்டபாணியை விரைவில் மாற்றிக்கொள்வது கோலியின் மிகப்பெரிய பலமாகும் - விக்ரம் ரதோர்
ஆட்டபாணியை விரைவில் மாற்றிக்கொள்வது கோலியின் மிகப்பெரிய பலமாகும் - விக்ரம் ரதோர்
By: Karunakaran Mon, 29 June 2020 1:57:35 PM
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள முன்னாள் வீரர் விக்ரம் ரதோர், பேஸ்புக் மூலம் நடைபெற்ற உரையாடலின்போது இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து புகழ்ந்து கூறியுள்ளார். விக்ரம் ரதோர் கூறுகையில், விராட் கோலி குறித்த வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், ஆட்டத்தின் மீது அவருக்கு உள்ள அர்ப்பணிப்பு தான் என்று கூறியுள்ளார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக கோலி கடினமாக உழைப்பதாகவும், தான் பார்த்தமட்டில், மிக கடினமான உழைக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் அவர் தான் எனவும்,
அதுமட்டுமின்றி சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது ஆட்டபாணியை விரைவில் மாற்றிக்கொள்வது அவரது மிகப்பெரிய பலமாகும் என விக்ரம் ரதோர் கூறினார்.
மேலும் அவர், கோலி அணியின் தேவைக்கு தக்கபடி தனது பேட்டிங்கை மாற்றிக்கொள்வார். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி என்று ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் வெவ்வேறு விதமான ஆட்டங்களை வெளிப்படுத்தக்கூடியவர். 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 4 சதங்களுடன் 40 சிக்சர்களை அடித்து நொறுக்கினார் என புகழ்ந்து கூறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 மாதங்கள் அதிரடி ஜாலம் காட்டிய அவர் அதன் பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் டெஸ்டிலேயே இரட்டை சதம் அடித்ததாகவும், ஒரு பந்தை கூட அவர் சிக்சருக்கு தூக்கியடிக்கவில்லை எனவும், இது போன்று வெவ்வேறு வடிவிலான போட்டிகளில் ஆடும் போது பேட்டிங் அணுகுமுறையை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது எல்லோராலும் செய்ய முடியாது எனவும் விக்ரம் ரதோர் கோலி குறித்து தெரிவித்துள்ளார்.