- வீடு›
- விளையாட்டு›
- ஆசிய பேட்மிண்டனில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு
ஆசிய பேட்மிண்டனில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு
By: Nagaraj Tue, 02 May 2023 09:02:34 AM
துபாய்: பிரதமர் பாராட்டு... துபாயில் நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து இந்த வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
40 ஆவது ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய வீரர்கள் முதல் சில ஆட்டங்களில் வெளியேறிய நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் மலேசியாவின் ஓய் யா சின் – தியோ ஈய் ஜோடியை எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர். பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்திய அணி 58 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பை பேட்மிண்டன் தொடரை கைப்பற்றியதால் இந்த போட்டி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கு முன்பு 1965-ம் ஆண்டு ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்நிலையில், 58 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது – சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இருவரும் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களால் இந்தியா பெருமை கொள்கிறது. பதக்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் வளர வாழ்த்துகிறேன் என்றார்.