- வீடு›
- விளையாட்டு›
- ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை
By: Karunakaran Wed, 21 Oct 2020 12:17:23 PM
ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பிரித்வி ஷா 7 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் தவான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தைப் பூர்த்தி செய்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார். மேலும், ஒரு ஐ.பி.எல். தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார்.
ஒரு ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.