- வீடு›
- விளையாட்டு›
- டோனி உலகக் கோப்பையை வென்று தந்த தருணம் இந்தியர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் - பிரதமர் புகழாரம்
டோனி உலகக் கோப்பையை வென்று தந்த தருணம் இந்தியர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் - பிரதமர் புகழாரம்
By: Karunakaran Thu, 20 Aug 2020 5:15:03 PM
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக இருந்த முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 15 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் அறிவித்தார். டோனியின் இந்த முடிவு ரசிகர்கள் உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
டோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து அவரது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரைபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும்பலரும் அவரை புகழ்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில், சிறிய நகரத்தில் பிறந்து தேசிய அடையாளமாக மாறியவர் டோனி. வெற்றியோ தோல்வியோ எந்த நேரத்திலும் அமைதியை கடைப்பிடித்து சிறந்து விளங்கியவர் டோனி. தாங்கள் 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளீர்கள். 2011 உலக கோப்பையை வென்று கொடுத்த தருணம் இந்திய மக்களால் என்றும் மறுக்கப்படாது. இறுதி போட்டியில் சிக்சர் விளாசி உலகக் கோப்பையை வென்று தந்த தருணம் இந்தியர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ராணுவத்தின் கவுரவ பதவியில் பணியாற்றியபோது டோனி மகிழ்ச்சிகரமாக இருந்தார். தங்களின் ஓய்வு 130 கோடி இந்திய மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. தங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் எழுதிய கடிதத்தை டோனி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.