- வீடு›
- விளையாட்டு›
- பெங்களூர் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? - ரோகித் சர்மா விளக்கம்
பெங்களூர் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? - ரோகித் சர்மா விளக்கம்
By: Karunakaran Tue, 29 Sept 2020 5:26:04 PM
துபாயில் நடந்த 13-வது ஐ.பி.எல். போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்சும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது.
இஷான் கிஷன் 58 பந்தில் 99 ரன்னும், போலார்ட் 24 பந்தில் 60 ரன்னும்எடுத்தனர். உதனா 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், சாஹல், ஆடம் சம்பா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆட்டம் டை ஆனதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்னே எடுத்தது. பெங்களூர் அணி 8 ரன் இலக்கை எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அந்த அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்னை எடுத்தது.
இந்த தொடரில் முடிந்த 2-வது சூப்பர் ஓவர் ஆகும். இது பெங்களூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். மும்பை 2-வது தோல்வியை சந்தித்தது. வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி கூறுகையில், இந்த போட்டியின் இரு அணியிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இதில் டிவில்லியர்சின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. வெற்றி இரு அணிகளின் பக்கம் மாறிமாறி இருந்தது என்று கூறினார்.
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அதே நேரத்தில் இஷான் கிஷனும், போலார்ட்டும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தார். அவர் நல்ல நிலையில் இல்லாததால் சூப்பர் ஓவரில் களம் இறக்கவில்லை. சூப்பர் ஓவரில் போதுமான ரன்னை எடுக்காததால் தோல்வியை தழுவினோம் என்று தெரிவித்தார்.