- வீடு›
- விளையாட்டு›
- ஸ்பெயினில் நடந்த தடகள போட்டியில் உகாண்டா வீரர் உலக சாதனை படைப்பு
ஸ்பெயினில் நடந்த தடகள போட்டியில் உகாண்டா வீரர் உலக சாதனை படைப்பு
By: Karunakaran Thu, 08 Oct 2020 2:40:37 PM
ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் துரியா ஸ்டேடியத்தில் தடகள போட்டி நடைபெற்றது. கொரோனா காரணமாக குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் விளம்பரதாரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தனர். இந்த தடகள போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி கலந்து கொண்டு 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்துள்ளார்.
எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே கடந்த 2005ம் ஆண்டு 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்திருந்தது உலக சாதனையாக இருந்தது. இதனை ஜோசுவா முறியடித்து உள்ளார். அவர் கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த உலக சாம்பியன்சிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.
ஜோசுவா கடந்த ஆகஸ்டில் மொனாக்கோ நகரில் நடந்த டையமண்ட் லீக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். கடந்த டிசம்பரில் வேலன்சியா நகரில் நடந்த 10 கிலோ மீட்டர் ரேசிங் பிரிவில் கலந்து கொண்டு இலக்கை அடைந்து, 6 வினாடிகள் வித்தியாசத்தில் 10 ஆண்டு கால சாதனையை ஜோசுவா முறியடித்திருக்கிறார்.
மகளிர் பிரிவு 5 ஆயிரம் மீட்டர் தடகள போட்டியில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை லெடிசென்பெட் கிடி பந்தய தொலைவை 14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு, அவரது நாட்டை சேர்ந்த மற்றொரு தடகள வீராங்கனையான திருனேஷ் திபாபா கடந்த 2008ம் ஆண்டு ஓஸ்லோவில் நடந்த போட்டியில் 14 நிமிடங்கள் 11.15 வினாடிகளில் பந்தய இலக்கை அடைந்து உலக சாதனை படைத்தார். தற்போது இதனை கிடி முறியடித்து உள்ளார்