- வீடு›
- ஆன்மீகம்›
- தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் வரும் 26ம் தேதி கொடியேற்றம்; பக்தர்களுக்கு அனுமதியில்லை
தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் வரும் 26ம் தேதி கொடியேற்றம்; பக்தர்களுக்கு அனுமதியில்லை
By: Nagaraj Fri, 24 July 2020 7:50:23 PM
வரும் 26ம் தேதி கொடியேற்றம்... தூத்துக்குடியின் புகழ் பெற்ற பனிமய மாதா கோவில் திருவிழா வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா கோவில் திருவிழா ஜூலை 26ம் தேதி 10 நாட்கள் நடக்கும். இதில் உள்ளூர் முதல் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு 438வது ஆண்டு விழா வருகிற 26ம் தேதி தொடங்க உள்ளநிலையில், இது தொடர்பாக கலெக்டர், எஸ்.பி, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
கலெக்டர் சந்தீப் நத்தூரி, எஸ்.பி ஜெயக்குமார், ஆயர் ஸ்டீபன், பங்கு தந்தை குமார் ராஜா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு, ஆயர், கலெக்டர், எஸ்.பி மூவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது ஆயர் ஸ்டீபன் கூறுகையில், “பனிமய மாதா ஆலய திருவிழாவைக் காண உலகம்
முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு
காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி விழாவைக் கொண்டாட முடிவு
செய்யப்பட்டுள்ளது.
திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும்.
கொடியேற்ற
விழா ஐந்து பேர் முன்னிலையில் நடைபெறும். அதன் பிறகு சிறப்பு வழிபாடு,
பிரார்த்தனை, நற்கருணை ஆசிர்வாதம், திருப்பலி நடைபெறும். இவை அனைத்தும்
ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள்
அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தே இதைக் காணலாம். பக்தர்கள் எந்தக்
காரணத்தை முன்னிட்டு ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வீட்டில்
இருந்தே கொரோனா தொற்று நீங்க பிரார்த்தித்துக் கொள்ளும்படி
கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.