அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா ஏற்பாடுகள் மும்முரம்
By: Nagaraj Fri, 24 July 2020 2:18:39 PM
விறுவிறுப்பாக நடக்கும் பணிகள்... உத்திரப்பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆகஸ்ட் 5 - ம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் 150 க்கும் மேற்பட்ட வி.ஐ.பிக்களும் 200 பொதுமக்களும் கலந்துகொள்கிறார்கள்.
இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்று அயோத்தி. இங்குதான், சரயு நதிக்கரையில் ஸ்ரீ ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இங்கு, பிரமாண்டமாக அமைகிறது குழந்தை ராமர் கோயில். இது தொடர்பாக அயோத்தி ராமர் கோயில் கட்டட வடிவமைப்பாளரான சோம்புராவின் மகன் நிகில் சோம்புரா செய்திளார்களிடம் கூறியதாவது:
”கடந்த 1988 - ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட கோயில் வடிவமைப்பைத்
தற்காலத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துள்ளோம். அதன்படி 141 அடியாகத்
திட்டமிட்டிருந்த கோயில் கோபுரத்தின் உயரத்தை 161 அடியாக அதிகரித்துள்ளோம்.
மேலும் கூடுதலாக இரண்டு மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளன” என்று
கூறியுள்ளார்.
புதிய வடிவமைப்பின்படி ராமர் கோயில் 161 அடி
உயரத்துடனும் 5 மண்டபங்களுடன் அமையவிருக்கிறது. ஆகஸ்ட் 5 - ம் தேதி
நடைபெறும் பூமி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, கோயில்
கட்டுமானத்தைத் தொடங்கி வைக்கிறார். எல் & டி நிறுவனத்தின் உதவியுடன்
கோயில் கட்டுமானம் நடைபெறுகிறது. மூன்றரை ஆண்டுகளில் கட்டுமானப்பணி
முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 3ம்
தேதியிலிருந்து 5ம் தேதிவரை வாரணாசி, அயோத்தியைச் சேர்ந்த வேத
விற்பன்னர்கள் பூமி பூஜைக்கான யாகங்களைச் செய்யவுள்ளனர். இந்த சிறப்பு
யாகம் நிறைவு பெற்றதும், 40 கிலோ எடைகொண்ட வெள்ளி செங்கலைக் கொண்டு பிரதமர்
நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
உச்ச நீதிமன்ற
தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 9 - ம் தேதி சர்ச்சைக்குரிய 2.77
ஏக்கர் நிலம் ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா கோயில் அறக்கட்டளையிடம்
ஒப்படைக்கப்பட்டது.
அதன் பிறகு , ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா
அறக்கட்டளை நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களிடம் இருந்து கோயில் கட்ட
நன்கொடை பெற்றது. ராமர் கோயில் ரூ.300 கோடி செலவில் அமைக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.