சரியான ஆடைகளை அணியுங்கள்... உங்களின் கம்பீரத்தை உயர்த்துங்கள்

உங்களின் மரியாதையையும், கம்பீரத்தையும் உயர்த்தி காட்டும் ஆடைகளை கவனமாக தேர்ந்தெடுத்து அணிவது சிறப்பான ஒன்றாகும். இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் பொதுவான ஒரு விஷயம்தான்.

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயேயும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல

தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால் சாதாரண காட்டன் துணிகளை உடுத்தினால் கூட நேர்த்தியாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது ரிச்சாக தெரியும். எனவே பேஷன் என்ற பெயரில் கண்டதையும் உடுத்தாமல் நமக்கு வசதியான ஆடைகளை அணிவதே நம் அழகை அதிகரித்துக் காட்டும்.

ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் காட்டன் டிரஸ் அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், பளிச்' வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

ஆடைகள் என்பது நம் மதிப்போடு தொடர்புடையது. ஏனோ தானோ என்று உடுத்துவதை விட நமக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே அழகையும், மதிப்பையும் அதிகரிக்கும். விழாக்கால ஆடைகள் காக்ரா - சோலி திருமணம், ரிசப்சன் போன்ற விசேஷங்களுக்கு ஏற்றது. வெளிர் நிறங்களில் வேலைப்பாடு செய்த காக்ரா சோலியில் நீங்கள் ஜொலிக்கப் போவது நிச்சயம்.