இலங்கையில் கொரோனாவால் மேலும் 22 பேர் பாதிப்பு

கொரோனாவால் மேலும் 22 பேர் பாதிப்பு... கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 22 பேரும் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 2 ஆயிரத்து 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்த தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 81 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.