அரசு விரைவு பஸ்களில் ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரம் பேர் பயணம்

தமிழகத்தில் 7 போக்குவரத்து கழகங்களில் சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் லட்சக்கணக்கானோர் பயணித்து வந்தனர். கொரோனா பொது ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நடைமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ்சில் குளிர்சாத கருவியை இயக்க அனுமதிக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன. பயணிகள், டிரைவர், கண்டக்டர் என அனைவரின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படுகின்றன. பயணிகள் பின் வாசல் வழியாக ஏறி, முன் வாசல் வழியாக இறங்க அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு உள்ளவர்கள் பஸ்களில் பயணம் செய்ய அனுமதி இல்லை.

வெளியூர் செல்லும் பஸ்களில் 32 பயணிகளும், மாநகர பஸ்களில் 24 பயணிகளும், விரைவு பஸ்களில் 26 பயணிகளும் மட்டுமே அமர வைக்கப்படுகிறார்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிகளின் வருகையை பொறுத்து பஸ்கள் இயக்கப்பட்டன. வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்த பஸ்கள் தமிழக எல்லை வரை இயக்கப்பட்டன. ஆனால் பயண கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று 240 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் 4,500 பயணிகள் முன் பதிவு செய்தும், 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் முன் பதிவு செய்யாமலும் பயணம் செய்தனர். அதாவது விரைவு பஸ்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இனி வரும் நாட்களில் விரைவு பஸ்களில் பயணம் செய்வதற்காக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.