கொலை வழக்கில் தண்டனை பெற்றவருக்கு 40 நாட்கள் சிறை விடுப்புக்கு அனுமதி

சென்னை: கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றவருக்கு 40 நாட்கள் சிறை விடுப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொலை வழக்கில் செல்வம் என்பவர் கடந்த 1994ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். குழந்தைகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்யவும், வீட்டை பழுதுபார்க்கவும் 40 நாட்கள் சிறை விடுப்பு கோரி சிறைத்துறைக்கு விண்ணப்பித்தார்.

அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது, கடந்த 29 ஆண்டுகளில் 15 முறை விடுப்பில் வெளி வந்துள்ளதாகவும், அந்த சமயங்களில் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடாமல், குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் சரணடைந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறை நன்னடத்தை அதிகாரி, விடுப்பு வழங்கலாம் என அறிக்கை அளித்துள்ளதாகவும், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே காவல் துறை பாதுகாப்புடன் 15 முறை உயர்நீதிமன்றம் விடுப்பு வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, சிறைக் கதவுகளின் முன், கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் பிரிந்து விடுவதில்லை எனக் கூறி, 40 நாட்கள் பாதுகாப்புடன் சிறை விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.