புரெவி புயலால் பாதித்த மக்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை

இன்று முதல் இலவச உணவு... புரெவி புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் 13ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் இவ்வாறாக உத்தரவிட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடர்ந்து பல இடங்களை கனமழை வெளுத்து வாங்குகின்றது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், தற்போது வரை 7 பேர் பலியாகியுள்ளதாகவும், 7 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் வரை பலியாகியுள்ளதாகவும் அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் பல குடிசை வீடுகள், ஒட்டு வீடுகள் சேதமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்டறிந்த முதல்வர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு சார்பில் வழங்கிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு, குடிநீர், பால் பொருட்கள் வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு தேவையான வகையில் நடமாடும் உணவகங்களை ஏற்பாடு செய்யவும், மக்களுக்கு சூடான உணவுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவிக்கையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் மக்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை தேவையானவற்றை மாநகராட்சி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை குடிசை பகுதிகளில் கிட்டத்தட்ட 5 லட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் இந்த திட்டம் மூலமாக 26 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.