சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை செப்டம்பர் 14-ந்தேதி கூடுகிறது!

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால், இந்தியா முழுவதும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

எனவே தமிழக சட்டசபையில் நடந்து வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23-ந்தேதியன்று அவசர அவசரமாக தள்ளிவைக்கப்பட்டது. அன்று ஒரே நாளில் 17 மானியக் கோரிக்கைகள் மீதான அலுவல்கள் நடந்தேறின. சட்டசபை விதியின்படி 6 மாத கால இடைவெளியில் சட்டசபையை கூட்ட வேண்டும். எனவே இம்மாதம் 24-ந்தேதிக்குள் தமிழக சட்டசபை கூட்டப்பட வேண்டும்.

தற்போது கொரோனா பரவல் குறையாத நிலையில் சட்டசபை கூடும் கோட்டை மைய மண்டபத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து சட்டசபையை நடத்த இயலாது. எனவே தமிழக சட்டசபை கூட்டத்தொடரை மாற்று இடத்தில் கூட்ட முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு 3-ம் தளத்தில் இருக்கைகள் போட்டு அளவுகள் எடுக்கப்பட்டன.

அந்த தளத்தில் ஆயிரம் இருக்கைகளை போட முடியும். தற்போது சட்டசபையில் நியமன உறுப்பினரையும் சேர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் இடங்கள் உள்ளன. அவை தவிர அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கும் அவையில் இருக்கை ஒதுக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே குறிப்பிட்ட அளவில் இடைவெளிவிட்டு தேவையான இருக்கைகள் போட முடியுமா? என்று கணக்கிடப்பட்டது.

தற்போது சட்டசபை கூட்டத் தொடரை கலைவாணர் அரங்கத்தில் நடத்தவும், 14-ந்தேதியன்று கூட்டத்தொடரை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோட்டை மைய மண்டபத்தில் உள்ள சட்டசபையின் அதே அமைப்பை பின்பற்றி கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்டரங்கில் தற்காலிக சட்டசபை அமைக்கப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து முடிவை தெரிந்து கொள்வது பற்றி அரசு தீர்மானித்துள்ளது.

இந்த கூட்டத்தொடர் நடக்கும் கால அளவு பற்றி முடிவு செய்வதற்காக இம்மாதம் 2-ம் வாரத்தில் ஒரு நாளில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் கூட்டப்படுகிறது. அதில் எத்தனை நாட்கள் சட்டசபை கூடும், என்னென்ன அலுவல்கள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றி தீர்மானிக்கப்படும். கொரோனா பரவல் காலகட்டத்தில் சட்டசபை கூட்டப்படுவதால், பரபரப்பு நிலவுகிறது.