நாளை ஆயுதபூஜை .. மதுரையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு

மதுரை: ஆயுத பூஜையின்போது தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் சுவாமி படங்களுக்கும் மற்றும் எந்திரங்களுக்கும் மாலைகள் மற்றும் பூக்களை அணிவித்து பூஜை செய்வது வழக்கம். இதனால் பூக்களின் தேவை மிக அதிகமாக இருக்கும்.

எனவே இதையொட்டி பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்று பூஜைக்கு பயன்படுத்துவார்கள். நாளை ஆயூத பூஜை விழா என்பதால் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க இன்று ஏராளமானோர் திரண்டனர்.

கடந்த வாரம் விற்கப்பட்ட விலையை விட இன்று இருமடங்கு விலை உயர்ந்து பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ கடந்த வாரம் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டது. இன்று மல்லிகை கிலோ ரூ.1,000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி ரூ.800-க்கும், முல்லை ரூ.900-க்கும், அரளி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், செண்டு பூ, மரிக்கொழுந்து ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மற்ற மலர்களும் 2 மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து இது தொடர்பாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூக்கள் வரத்து அதிகமாக உள்ளதால் பூக்களின் விலை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று மல்லிகை பூக்கள் கிலோ ரூ.3 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது மல்லிகை பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் விலை கட்டுக்குள் உள்ளது என தெரிவித்தனர்.