பேவிபிராவிர் மாத்திரைகள் கொரோனாவுக்கு நல்ல பலனைத் தருவதாக தகவல்

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற மருந்துகள் சோதனை ரீதியாக கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் இன்புளூவென்சாவுக்கு வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரைகள் தரப்படுகின்றன.

இந்த பேவிபிராவிர் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கும் சோதனை முறையில் டாக்டர்கள் தருகின்றனர். இந்தியாவில் 7 முக்கிய இடங்களில் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்த மாத்திரைகள் உட்படுத்தப்பட்டபோது, இந்த மாத்திரைகள் லேசான பாதிப்பு முதல் மிதமான பாதிப்பு வரை உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பது தெரிய வந்துள்ளது.

இந்த மாத்திரைகளின் பரிசோதனையில், இவை எந்தவொரு மோசமான பாதகமான விளைவுகளையோ, மரணத்தையோ ஏற்படுத்தவில்லை எனவும், 12 நோயாளிகளுக்கு யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கிறது. இரைப்பை குடல் தொந்தரவும் லேசான அளவில் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து டாக்டர் ஜாரிர் உட்வாடியா கூறுகையில், தொற்று நோயின் பரவலை கருத்தில் கொண்டு, அவசர உணர்வோடு இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அறிவியல் கொள்கைகளில் சமரசம் செய்யப்படவில்லை. ஆரம்ப முடிவுகளை சுதந்திரமாக காண ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவை ஊக்கம் அளிக்கின்றன. கொரோனா நோயாளிகளுக்கு பேவிபிராவிரை பயன்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.