மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படுகிறது என முதல்வர் தகவல்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் கொண்டு வரப்படுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுடன் ஆலோசித்து தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தீவிரப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது. தொழில் பணிகள் தொய்வில்லாமல் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் தமிழகம் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. கொரோனா காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

டெங்கு கொசு உருவாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் முகாம் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கள பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.