தொடர் கனமழை ... உத்தரப்பிரதேசம் மற்றும் குர்கான் பள்ளிகளுக்கு விடுமுறை

உத்தரப்பிரதேசம் : உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இரவு பகலாக பெய்து வரும் இந்த கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .

மேலும் அந்த மாநிலத்தின் சில இடங்களில் விழுந்த இடியின் காரணமாக 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக உத்தரப்பிரதேசம் மற்றும் குர்கானின் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து குர்கானில் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்திரபிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதையடுத்து அங்கு காசியாபாத், இந்திராபுரம், நொய்டா, தாத்ரி, குருகிராம், ஃபரிதாபாத், ஆல்வார் போன்ற பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு வரை பெய்த தொடர் மழையால் டெல்லி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.