இலங்கை அளித்த தேயிலையால் சர்ச்சை... லெபனான் துறைமுக வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை அன்பளிப்பாக அளித்த தேயிலை, அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை அனுப்பிய தேயிலையை ஜனாதிபதியின் பாதுகாவல் பிரிவு மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு விநியோகித்ததால் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் மீது சமூக ஊடகவாசிகள் கடுமையான விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். லெபனான் ஆட்சியாளர்கள் மீது கட்டுக்கடங்காத ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரமும் அங்கு பேசுபொருளாகியுள்ளது.
லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இரசாயனங்கள்
வெடித்து சிதறியதில் 190 பேர் வரையில் உயிரிழந்தனர். சுமார் 300,000
இலட்சம் குடும்பங்கள் வீடிழந்தனர்.
இந்த மாபெரும் அனர்த்தத்தையடுத்து,
உலகின் பல நாடுகள் தம்மால் இயன்ற உதவியை அந்த நாடுகளிற்கு வழங்கின.
இலங்கையும் தேயிலையை அன்பளித்தது.
ஆகஸ்ட் 24 ம் திகதி லெபனான்
ஜனாதிபதி அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. இலங்கைத்தூதர்
தேயிலையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் புகைப்படத்துடன், பெய்ரூட்
குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,675 கிலோ (3,685 பவுண்ட்ஸ்)
சிலோன் தேயிலையை நன்கொடையாக அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நன்கொடையாக
வந்த தேயிலை குறித்து லெபனான் ஊடகங்களும், சமூக ஊடகங்களும் கேள்வி
எழுப்பின. இதையடுத்து இரண்டாவது அறிக்கையை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டது.
அதில் தேயிலையை இராணுவத்திற்கு பரிசளித்தமை மற்றும் அதை ராணுவ வீரர்களின்
குடும்பங்களிற்கு விநியோகித்தமைக்கு இலங்கைக்கு நன்றி தெரிவிக்கும்படி,
இலங்கையிலுள்ள லெபனான் தூதரை ஜனாதிபதி மைக்கேல் அவுன் கேட்டுள்ளதாக அந்த
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு லெபனான் மக்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். “தேயிலை திருடன்” மற்றும் “சிலோன்
தேநீர்” என்ற ஹாஷ்டேக்குகள் டுவிட்டரில் பிரபலமாகி வருகிறது. “சிலோன்
தேநீர் லெபனானியர்களுக்கு அனுப்பப்பட்டது. குறிப்பாக குண்டு வெடிப்பால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது.
நிச்சயமாக இது
தேவையில்லாதவர்களுக்கு அனுப்பப்பட்ட பரிசு அல்ல. உங்கள் பரிவாரங்களுக்கு
உதவி விநியோகிப்பது வெட்கக்கேடானது” என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
பவுலா யாகூபியன் டுவிட்டரில் குறிப்பிட்டார். அவர் குண்டுவெடிப்பை
தொடர்ந்து, பதவியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.