மதுரை மாவட்டத்தில் புதிதாக 295 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 6,990 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 295 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 6,990 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி 295 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,285 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,667 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வேகமாக பரவுவதையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.