சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1348 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தான் நேற்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், தமிழகத்தில் 5,489 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 6,19,996 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் 1348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,72,773 ஆக உயர்ந்துள்ளது.

5,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், 5,64,092 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 46,120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 9,784 ஆக அதிகரித்துள்ளது.