நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக குறைந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் குறைவான எண்ணிக்கையில் புதிய பாதிப்பு பதிவாகி வருகிறது.

அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 10,358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று மங்களபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,386 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 37 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,070 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 102 பேர் பலியான நிலையில் தற்போது 214 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.