மருத்துவமனை கறாரால் ஆம்புலன்சிலேயே இறந்த கொரோனா நோயாளி

மருத்துவமனையின் கறாரால் கொரோனா நோயாளி ஆம்புலன்ஸ்சிலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 3 லட்சம் கட்டினால் மட்டுமே அட்மிட் செய்வோம் என்று தனியார் மருத்துவமனை ஒன்று கறாராகக் கூறியதால் ஆம்புலன்ஸிலேயே அந்த நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்குவங்க மாநிலத்தில் டாம்லூக் என்ற நகரை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகிகள் ரூபாய் 3 லட்சம் அட்மிஷன் கட்டணம் கட்டிய பிறகே நோயாளியை அட்மிட் செய்து சிகிச்சை அளிப்போம் என்று கறாராகக் கூறி உள்ளனர்.

இதனை அடுத்து அவருடைய உறவினர்கள் நோயாளியை அட்மிட் செய்து சிகிச்சை செய்யுங்கள், நாங்கள் சில மணி நேரத்தில் பணத்தை கட்டி விடுவோம் என்று கெஞ்சி உள்ளார்கள். ஆனால் அட்மிஷன் கட்டணம் கட்டினால் மட்டுமே நோயாளியை அனுமதிப்போம் என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்து விட்டதால் நோயாளியின் மனைவி பணம் ஏற்பாடு செய்ய அங்கும் இங்கும் அலைந்து உள்ளார். அவர் பணம் ஏற்பாடு செய்து திரும்பி வருவதற்குள் ஆம்புலன்சிலேயே அவருடைய கணவர் உயிரிழந்து விட்டார்.

ஆம்புலன்ஸில் தனது கணவர் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது மனைவி கதறி அழுத காட்சி பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.