முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்; மத்திய அரசு தகவல்

உலக நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றை மக்களுக்கு போட்டு பரிசோதித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக வாங்கி, அவற்றை முன்னுரிமை குழுக்களுக்கு இலவசமாக போடச்செய்யும் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசே செயல்படுத்தும். கொரோனா தடுப்பூசி தயாரானவுடன், மத்திய அரசுதான் நேரடியாக கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்தற்கான தனிப்பாதைகளை மாநிலங்கள் வகுக்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்கான பயனாளிகளை (முன்னுரிமை குழுக்களை) அடையாளம் காணும் செயல்முறையை மாநிலங்கள், யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உதவியுடன் மத்திய அரசு தொடங்கி உள்ளது.

ஆரம்ப கட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அவர்கள், டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 1 கோடி பேர்; மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், ஆயுத படையினர் என 2 கோடி பேர்; 50 வயதுக்கு மேற்பட்டோர் 26 கோடி பேர்; நாள்பட்ட வியாதிகளை கொண்டுள்ள 50 வயதுக்கு உட்பட்ட சிறப்புக்குழுவினர் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவைப்படுவோர் சுமார் 1 கோடி பேர் ஆவார்கள்.

இந்த முன்னுரிமை குழுவினரை அடையாளம் கண்டு அடுத்த மாதம் மத்திக்குள் பட்டியலிடுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்படுவார்கள். தடுப்பூசி போடுகிற பணியாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.