வாலிபரின் பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்

போலீசாருக்கு குவியும் பாராட்டு... சென்னையில் கோகுல் குமார் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பணத்தை போலீசார் அதிரடியாக மீட்டுக் கொடுத்துள்ளனர்.

சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்த கோகுல் குமார் (34), என்பவரின் HDFC வங்கி கணக்கிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 13 -ம் தேதி அன்று ரூ.14,62,988/- பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 4 வாடிக்கையாளர்களுக்கு கோகுல் குமாருக்கு தெரியாமலேயே பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவருக்கு குறுஞ்செய்தி வழியாக தெரியவர, இது குறித்து கோகுல் குமார் சென்னை-மாதவரம் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து, மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மேற்பார்வையில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், கோகுல் குமாரின் HDFC வங்கி கணக்கிலிருந்து SBI, ICICI, Indusland Bank, Amex Bank, -ல் கணக்கு வைத்துள்ள நான்கு வாடிக்கையாளர்களுக்கு அந்த பணம் சென்றுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு கோகுல்குமாரின் பணத்தை மீட்டு திருப்பி கொடுக்கும்படி காவல்துறையினர் பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதன் பேரில் வங்கி நிர்வாகத்தினர், கோகுல்குமார் கணக்கிற்கு ரூ.14,62,988/-ஐ திரும்ப செலுத்தினர். தனது பணம் திரும்ப கிடைத்ததில் கோகுல் குமார் பெரும் மகிழ்ச்சியடைந்தார்.

துரிதமாக செயல்பட்டு அப்பாவி ஒருவரின் பல லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.