தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு; பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீடிக்கும் மத்திய உள்துறை அறிவித்த நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆக.31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி சென்னையில் ஆக.1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில், மசூதி, தேவாலங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள் இ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயமாக்கப்படுகிறது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

மாநிலங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும். திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும். மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும். ரெயில், விமானப் போக்குவரத்து விஷயத்தில் தற்போதைய நடைமுறை தொடரும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.