சீனாவின் வூஹான் நகரில் அவசரகால தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்

அவசரகால தடுப்பூசி... சீனாவின் வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஹுபெய் மாகாண தலைநகரான வூஹானில், கடந்தாண்டு, டிசம்பர், 31ஆம் திகதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட வூஹான் நகரில், ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தொற்று பரவல் அதிகரித்துள்ளமையினை அடுத்து, ஹுபெய் மாகாணம் முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஹுபெயில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, ஏப்ரல், 8இல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

ஹுபெய் மாகாணத்தில், இதுவரை, 68 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில், வூஹானில் மட்டும், 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

மே மாதம், வூஹான் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை சீன அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

இதில், மிக சிறிய எண்ணிக்கையிலேயே தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மிகப் பெரிய அளவிலான கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை, சீன அரசாங்கம் முன்னெடுத்தது. இதில், பீஜிங்கை சேர்ந்த, 27 பேருக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதியானது.

சீன தயாரிப்பான, 11 தடுப்பூசிகள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சோதனையில் உள்ளன. இந்நிலையில், கொரோனா பரவ துவங்கிய வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணியை, அந்நாட்டு அரசாங்கம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஹுபெய் மாகாணத்தின், 15 மாவட்டங்களில் உள்ள, 48 முகாம்களில், 18 – 59 வயது வரையிலான, சில குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம், அவசரகால தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாக, வூஹான் நகர நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய அதிகாரி தெரிவித்தார்.

‘தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள், ஒரு மாத காலத்திற்குள், மேலும் இரண்டு, ‘டோஸ்’ மருந்துகளை செலுத்திக் கொள்ள வேண்டும்’ என, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.