மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு,

நேரடி மாணவர் சேர்க்கை கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடத்தப்பட்டது. எனினும், சில அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன.

எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று முதல் 14.09.2023 வரை என 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

இதையடுத்து கல்லூரிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் TNGASA 2023-UG VACANCY என்ற தொகுப்பில் காணலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.