இன்றும் நாளையும் மத்திய சுகாதார அமைச்சகம் மூடல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தலைநகர் டெல்லி சிக்கி தவித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக, அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டின் சுகாதாரத்தை கவனிக்கும் மத்திய சுகாதார அமைச்சகமான நிர்மாண் பவனில் கொரோனா வைரஸ் தற்போது பரவியுள்ளது.

இந்த ஒரு வார காலத்தில் ஒரு இயக்குனர், ஒரு துணைச்செயலாளர், ஒரு டாக்டர், 2 ஊழியர்கள் என 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நிர்மாண் பவன் கட்டிடத்துக்கு அடிக்கடி சென்று வந்தவர்கள் ஆவர். இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் சிலருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பல அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதி, அனைவரும் முகக்கவசம், காணொலி காட்சி மூலமாக சந்திப்புகள், கூட்டங்கள் என பல கட்டுப்பாடுகள் விதித்தும் கடந்த 7 நாட்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்றும், நாளையும் மூடப்படுகிறது. இந்த 2 நாட்களும் அங்கு தீவிரமாக சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அறைகள், கழிவறைகள், கதவு கைப்பிடிகள், சுவிட்சுகள், நாற்காலிகள், மேஜைகள், சோபாக்கள், அலமாரிகள், கணினி உபகரணங்கள், அச்சு எந்திரங்கள் போன்ற அனைத்திலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்.