மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இதனை அடுத்து அதன்படி இந்தாண்டுக்கான மீன் பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீன் பிடித்து துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

இச்சூழலில் மீன் பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. எனவே இதன் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகள் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடந்த 2 மாதங்களாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் மீன்களின் விலை குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.