சென்னை திரும்ப பொதுமக்களின் நலன்கருதி, போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு


சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக வழக்கமாக இயக்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 பேருந்துகள் இன்று இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , ‘சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக 24/10/2023 இன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 1213 சிறப்புப் பேருந்துகள் ஆக மொத்தம் 3313 பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் அறிவிப்பினை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.