பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் ஊழியர்கள் போராட்டம்

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். கூகுள் அலுவலகத்திற்கு வெளியே சுமார் 250 ஊழியர்கள் எதிர்ப்புப் பலகைகளை ஏந்தியவாறு நின்றனர்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல இணையதள தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் கூட தங்கள் பணியாளர்களில் 10 சதவிகிதம் வரை பணிநீக்கம் செய்து வருகின்றன கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், அதன் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில் இந்திய கிளையில் பணிபுரிந்து வந்த 453 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அந்நிறுவனம் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த மெயில் வியாழக்கிழமை நள்ளிரவு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கூகுள் இந்தியாவின் தலைவரும் துணைத் தலைவருமான சஞ்சய் குப்தாவால் இந்த மெயில் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். கூகுள் அலுவலகத்திற்கு வெளியே சுமார் 250 ஊழியர்கள் எதிர்ப்புப் பலகைகளை ஏந்தியவாறு நின்றனர்.