மக்கள் அவதானத்துடன் செயல்பட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அறிவுறுத்தல்

அவதானத்துடன் செயல்பட வலியுறுத்தல்... கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்டத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் மாவட்டச் செலயக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 97 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 57 பேருக்கான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. மேற்படி 97 பேரும் புங்குடுதீவிலுள்ள பெண்ணுடன் தொடர்புபட்டவர்களாவர்.

பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். குறிப்பாக, தேவையற்ற பயனங்களை தவிர்த்துக்கொள்வதன் மூலமும் உரிய சுகாதார முறைகளைப்பின்பற்றியும் செயற்பட வேண்டும். அதேவேளை பொதுச்சந்தை மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தவிரத்துக் கொள்ளல், கைகளை சவர்க்காரம் இட்டுக்கழுவுதல், முகக்கவசங்களை அணிதல் போன்ற செயற்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைவரும் இவ்விடயத்தில் மிக அவதானத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது பேருந்துகளில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்த்தல், வர்த்தக நிலையங்களை நாடி வருகின்ற மக்களுக்கு உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.