அரசாங்கத்தை பிடித்துள்ளது கொவிட்-20; மனோ கணேசன் விமர்சனம்

அரசாங்கத்தை பிடித்திருக்கும் கொவிட்-20... நாட்டை பிடித்திருக்கும் நோய் ‘கொவிட்- 19’ ஆனால், 20ஆவது திருத்தத்தை வைத்துக் கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் ‘கொவிட்- 20’ என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசின் உள்ளே இப்போது 20ஆவது திருத்தம் தொடர்பில் பெரும் கலகம் நடைபெறுகிறது. எதிரணியில் நாம் இதை எதிர்ப்பதை போன்று அரசுக்குள் இருந்து பலர் எதிர்குரல் எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.

அமைச்சர்கள் விதுர விக்கிரமநாயக்க, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளார்கள். ஜனாதிபதிக்கு நெருக்கமான விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் கேவிந்து குமாரதுங்க எதிர்க்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்க்ஷ இப்போது இரண்டாவது முறை 20ஆவது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் இல்லை. அரசுக்கு ஆதரவு அளித்த பல தேரர்கள், சமூக தலைவர்கள் எதிர்குரல் எழுப்புகிறார்கள். இதுதான் இன்று அரசை பிடித்துள்ள கொவிட்- 20 நோயாகும்.

இதை மறைக்கவே இன்று இந்த அரசு, வழமைபோல் இனவாதத்தை கையில் எடுத்துள்ளது. அதனாலேயே நண்பர் ரிசாட் பதியுதீன் மீது கைது முயற்சி நடைபெறுகிறது. அவரை கைது செய்துவிட்டு, நாட்டில் ‘ரிசாட் கைது’ என செய்தி தலைப்பை உருவாக்க அரசு முயல்கிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.