யூடியூபர் TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை: டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பு ...பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து பெரும் விபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டு உள்ளது. அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்தது. இதற்கு இடையே டிடிஎஃப் வாசன் இரண்டு முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இச்சூழலில் டிடிஎஃப் வாசனின் காவலை நவம்பர் 9 ஆம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவ்ர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 4-வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். 3 வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது