புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய அரசால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் தற்போது அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து படிப்படியாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்வகையில் வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகளை திறக்கவும் அரசு முடிவு செய்து இளங்கலை, முதுகலை படித்து வரும் மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகளும் தற்போது துவங்கியுள்ளது.

மேலும் பள்ளி வகுப்புகள் துவங்கிய சில நாட்களிலேயே புயல் மற்றும் மழை காரணமாக அவ்வப்போது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழையால் புதுச்சேரியில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.