சேர்ந்து வாழ மறுத்ததால் காதல் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் கைது

கண்ணூர் மாவட்டம் தளி பகுதியை சேர்ந்த பிரிஜேஷ் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி அருகே உள்ள வெண்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த பிரிஜா இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் பிரிஜா தனது 2 மகன்களுடன் மடத்தும்குழி என்ற இடத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் பிரிஜா, தொடர்ந்து அங்கு பஜாரில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பிரிஜாவை பலமுறை பிரிஜேஷ் சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிரிஜா வழக்கம்போல் தனது தாயார் வீட்டில் இருந்து பஜாரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்காக நடந்து சென்றபோது, பிரிஜேஷ் அவரை வழிமறித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மீண்டும் அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

ஆத்திரம் அடைந்த பிரிஜேஷ், பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த ஆசிட்டை பிரிஜா மீது வீசினார். இதில் அவரது முகம், தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியால் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்பின், தனது காதல் மனைவி மீது ஆசிட் வீசிய பிரிஜேஷை, அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் ஆசிட் வீச்சில் அவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர், பெருநாடு போலீசில் ஒப்படைக்கப்பட்டபின், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.