கனமழை எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம்

புதுடில்லி: டெல்லியை மழை விட்டதையடுத்து, ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவ மழை மும்பையை வெளுத்து வாங்குகிறது. மும்பை தானே, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு இந்திய வானிலை மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழை பெய்து மும்பையின் பல பகுதிகளில் போக்குவரத்தை முடக்கியுள்ளது. பாந்த்ரா , செம்பூர், மாதுங்கா உள்பட மும்பையின் மையப்பகுதிகளில் கன மழை காரணமாக வெள்ளம் பெருகியது.

ரயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.இதனால் பல நூறு பயணிகள் ரயில் நிலையங்களில் காத்துக் கிடந்தனர்.

இன்றும் கனமழை பெய்யும் என்று மும்பை நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று புனே நகரிலும் பலத்த மழை பெய்து வருகிறது.