இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுரை

இலங்கை: தூதரகம் அறிவுரை... இலங்கையில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகிய நிலையில், இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கிடையே, கொழும்பில் இந்திய விசா அலுவலக அதிகாரி விவேக் வர்மா என்பவர் திங்கள்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளானார். இவரை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் நலம் விசாரித்தனர்.

இது தொடர்பாக இந்திய தூதரக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், கொழும்பிற்கு அருகில் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய விசா அலுவலக அதிகாரி விவேக் வர்மாவை இந்திய உயர் அதிகாரிகள் சந்தித்தனர்.

இச்சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை மக்களிடையிலான உறவு, அன்பும், நட்பும் நிறைந்தது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் தங்கள் பகுதியில் உள்ள சூழலை அறிந்து பயணங்களை எச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டும். உதவி தேவைப்படுபவர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.