சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருந்த பணம் 6 சதவீதம் குறைந்துள்ளதாக வங்கி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்களது பணம் சேமித்து வைத்துள்ளனர். இதில் இந்தியர்களின் பணவிவரத்தை வருடாந்திர புள்ளிவிவரமாக சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தியர்கள் சுவிஸ் தேசிய வங்கியில் வைத்துள்ள பணத்தின் புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் ஆகியவை போட்டு வைத்திருந்த பணம், கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது வங்கியில் ரூ.6 ஆயிரத்து 625 கோடி ஆக இந்தியர்கள் பணம் உள்ளது.

இந்த ரூ.6 ஆயிரத்து 625 கோடியில் இந்தியாவில் உள்ள கிளைகள் மூலம் அனுப்பப்பட்ட பணமும் அடங்கும். தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியர்களின் பணம் குறைந்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் 3-வது மிகக்குறைவான தொகை ஆகும்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தை கருப்பு பணமாக கருத முடியாது என்பதால் தான் இந்தியர்கள் அங்கு தங்களது பணத்தை போட்டு வைக்கின்றனர். ஆனால் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தியர்களின் கணக்கு விவரத்தை சுவிஸ் தேசிய வங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், இந்தியாவுக்கு அளிக்க தொடங்கியது.