இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்... முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

சென்னை: ரேஷன் கடத்தலில் ஈடுபடும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் கடத்தல்களை தடுக்க முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவுத்துறையை செம்மைப்படுத்த வேண்டும். ஒழுங்கான பொருட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பொருட்கள் விநியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் எங்கள் ஆட்சியில் தரமான பொருட்களை, முறையாக விநியோகம் செய்துள்ளோம். அதே போல் தி.மு.க. ஆட்சியில் மூத்த குடிமக்கள் பொருட்கள் வாங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
கைரேகை பதிவதில் தாமதம் ஏற்படுவதால் பொருட்கள் பிறகு தருவதாகக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். தி.மு.க. அரசு சொன்ன திட்டங்களை நடைமுறைப் படுத்தவில்லை. தமிழர்களின் விழாவான பொங்கல் விழாவிற்கு அவர்கள் சொன்னது போலவே 5 ஆயிரம் வழங்க வேண்டும். ஆதார் கார்டை இணைத்தவர்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு என்று சொல்லாமல் எல்லோருக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும். அதற்கு பின்னர் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

தமிழகத்தில் ஏற்படும் ரேஷன் அரிசிக் கடத்தல் குறித்த கேள்விக்கு ரேஷன் கடத்தலில் ஈடுபடும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் கடத்தல்களை தடுக்க முடியும். அதே போல் கடத்தல் வண்டிகளை சீஸ் செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள் கடத்தல் திடீர் என்று நடக்கவில்லை. அது ஒரு சைக்கிளாக வேலை செய்கின்றனர்.

அவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல் போதைப் பொருட்கள் சப்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். சப்ளை செய்யும் நபர்களை மட்டும் பிடிக்காமல் அதற்கு ஆணி வேராக இருக்கும் நபர்களை கைது செய்து முழுமையாக போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.