சுவாமி விவேகானந்தர் நமக்கு காட்டிய உன்னதமான வழியில் நடப்போம் - அமித் ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரண்டு நாள் பயணமாக மேற்குவங்கத்திற்கு சென்றுள்ளார். கொல்கத்தா சென்ற அவர், ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். அதனைத்தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கொல்கத்தாவில் அமித் ஷா பேட்டி அளிக்கையில், இது விவேகானந்தர் ஜி பிறந்த இடம். ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் நமக்கு காட்டிய உன்னதமான வழியில் நடப்போம்' என்று கூறினார். அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் குடிராம் போஸின் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் போஸின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசியதை தொடர்ந்து அமித்ஷா கூறுகையில், சிறந்த சுதந்திர போராட்ட வீரர் குடிராம் போஸின் வீட்டின் மண்ணில் என் நெற்றியைத் தொட முடிந்தது. இது எனது அதிர்ஷ்டம். இந்திய சுதந்திர இயக்கத்திற்காக தன்னை தியாகம் செய்ய அவர் மகிழ்ச்சியுடன் தூக்கு மேடைக்குச் சென்றவர் என்று பெருமிதமாக கூறினார்.

பின்னர் அமித் ஷா, பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோர் மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டில் மதிய உணவை சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து, அமித் ஷா கொல்கத்தா செல்லவுள்ளார். கொல்கத்தாவின் ராஜர்ஹாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.