ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இருப்பினும் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை கர்நாடக, தமிழக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி செய்தனர்.

பின்னர் அவர்கள் தொங்கு பாலம், பார்வை கோபுரம் ஆகியவற்றில் நின்று காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் மெயின் அருவி பகுதிக்கு சென்று செல்பி எடுத்து கொண்டனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.