இங்கிலாந்தில் இன்று முதல் முக கவசம் அணிவது கட்டாயம் - அரசு அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கிலாந்து நாட்டில் இளவரசர் சார்லஸ், அதிபர் போரீஸ் ஜான்சன் உள்பட பலரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில், புதிய விதிகளின்படி வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இன்று முதல் முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ரெயில்வே மற்றும் விமான நிலையங்கள், உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்கி செல்வோர், முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார செயலாளர் மேட் ஹேன்காக் கூறுகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் புதிய விதிகளை ஒவ்வொருவரும் பின்பற்றி பெரும் பங்காற்ற வேண்டும். இன்று முதல் முக கவசங்களை அணியாதவர்களுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் எனவும், இதில், 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்றும் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.